எருமேலி முதல் சந்நிதானம் வரை

சபரிமலைக்கு செல்லும் வழியில் அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்தப்புழை, பந்தளம் ஆகிய இடங்களிலுள்ள தர்ம சாஸ்தாவின் கோயில்களுக்கு சென்று வழிபட்டு பின் எருமேலி என்னும் புனித தலத்தை சென்றடையலாம். அங்கிருந்த சுமார் 40 மைல் நடந்து சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் சந்நிதானம் சென்றடையும் பாதையே பெருவழிப்பாதை என்று கூறப்படுகிறது.
எருமேலி: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் சுவாமி காட்சியளிக்கிறார்.
வாவர் கோயில்: எருமேலியில் தர்மசாஸ்தா கோயிலின் சற்று துõரத்தில் வாவர் கோயில் உள்ளது. வாவர் முஸ்லீம். ஹிரிஹரபுத்திரனின் நண்பருமாவார். ஐயப்ப பக்தர்கள் வாவர் கோயிலில் சென்று வணங்கி அங்கு பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டைதுள்ளல்: இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாவர் சந்நிதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சந்நிதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு யாத்திரையை தொடர வேண்டும்.
பேரூர்தோடு: இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.
காளைகட்டி: காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து அழகிய அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் வதம் செய்வதைக் காண கைலாயத்திலிருந்து வந்த சிவபெருமான், அவருடைய வாகனமான காளையைக் கட்டிய இடமே காளைகட்டி என்று புராணங்கள் கூறுகின்றன.
அழுதாநதி: காளைக்கட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். இங்கு ஒரு இரவு தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மணிகண்டனால் துõக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
மறுநாள் அதிகாலையில் அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டம். பூஜைக்குப்பின் உணவருந்தி சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.
அங்கேயுள்ள கல்லிடும் குன்று என்னுமிடத்தில் அழுதையாற்றிலிருந்து எடுத்து வந்த கற்களைப் போட்டு சுவாமியை வணங்க வேண்டும்.
பின் யாத்திரையை தொடர்ந்து காடு, மலை ஏறி, இறங்கி உடும்பாறைக் கோட்டை இலவந்தோடு முதலிய இடங்களைக் கடந்து கரிவலம் தோடு என்ற இடத்தை அடையலாம். அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.
கரிமலை: பின் கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையின் மண் கருப்பாக இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு யானைகள் மற்றும் கொடிய மிருகங்களின் தொல்லையும் அதிகம்.
இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் கசிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. விரதம் தவறிய பக்தர்களை தேவதைகள் இதற்குமேல் செல்ல விடுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் நீர்வற்றாத கிணறு ஒன்று உள்ளது. ஐயப்பன் தன் அம்பை எய்து இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இங்கு சிறிது ஓய்வெடுத்தப்பின் செங்குத்தான வழியில் இறங்க வேண்டும். சிறயானைவட்டம், பெரியானைவட்டம் என்ற யானைகள் தங்குமிடங்களை கடந்து காட்டில் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.
பம்பா நதி: எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். சிறிது துõரத்தில் வேறு ஒரு நதி இதனுடன் கலக்கிறது. இந்த இடம் திரிவேணி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடி நீண்டதுõரம் நடந்து வந,த களைப்பைப் போக்கிக் கொள்ளலாம்.
பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி, இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பின் உணவு தயார் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு ஐயப்பன்மார் சிலருடன் சேர்ந்து உணவருந்தலாம்.
பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள விநாயகர், ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம்.
நீலிமலை: இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். வழியில் அப்பாச்சிமேடு என்ற இடத்தை வந்தடைந்தவுடன் கன்னி சாமிகள் பள்ளத்தாக்கில் அரிசிமாவு உருண்டை எரிந்து துர்தேவதைகளை திருப்தி செய்வர்.
சபரிபீடம்: சிறிது துõரம் நடந்து சபரிபீடம் என்று அழைக்கப்படும் ஓர் சமதளமான இடத்தை அடையலாள். இங்குதான் சபரி என்னும் பக்தை தவம் செய்து விண்ணுலகம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
சரங்குத்தி: இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். சபரிமலைக்கு புனித யாத்திரை வரும் கன்னி ஐயப்பன்மார் தங்கள் இருமுடிக்கட்டில் ஓர் அன்பினை செருகி எடுத்து வருகின்றனர். அதை சரங்குத்தியில் செருகிய பின்பே புனிதமான பதினெட்டுப் படிகளில் ஏறும் தகுதி பெறுகின்றனர். கடைசியில் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் சென்றடையலாம்.
எருமேலியிலிருந்து மலைகளில் ஏறி, இறங்கி காட்டினுள் நடந்து தரமசாஸ்தாவின் சந்நிதிக்கு சுமார் 40 மைல் கடந்து வரும் இந்த பாதைதான் பெரும்பாதை என்றழைக்கப்படுகிறது. சாலக்காயம் வழியாக பம்பையாறு வந்தடைவோரும், குமுளி, வண்டிப்பெரியார் வழியாக நேராக சந்நிதானம் வந்தடையும் பக்தர்களும் உண்டு.
பக்தர்கள் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.
பக்தர்கள் பின் கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தரமசாஸ்தாவை தரிசிக்கலாம். அடுத்து கனிமூலை கணபதியையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். இருமுடிக்கட்டு இல்லாத பக்தர்கள் வடக்கு முகமாக உள்ள படிகளில் ஏறி சுவாமியே தரிசிக்கலாம்.
பின் வாவர் சந்நிதியிலும், நாகர் சந்நிதியிலும் கும்பிட்டுவிட்டு மாளிகைப்புறத் தம்மன் கோயிலை சென்றடையலாம். இங்கு மஞ்சள்பொடி துõவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலை எழுந்து நீராட வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.
அந்த நெய்யினால் ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்து அந்த நெய்யையும், அந்த தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு