தமிழக மீனவர்களின் ஆதரவை இழந்துள்ள புலிகள்

-வித்தி

வழக்கம் போலவே பழ. நெடுமாறன் அவர்களின் மற்றுமொரு ஈழ ஆதரவுப் போராட்டம் எதுவித பலனும் இல்லாமல் முற்றுப்பெற்றிருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருப்பதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டு அவர் நடாத்திய போராட்டம் அவரையறியாமலே ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.நெடுமாறன் ஐயாவை ஈழத்தமிழர்கள் அறிந்த அளவிற்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த நெடுமாறன், பின்னர் தீவிர தமிழ்த் தேசிய பற்றாளராக மாறினார்.புலிகளின் தலைவர் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்து வரும் நெடுமாறன், தமிழகத்தில் புலிகளுக்கு தேவையான அலுவல்களைக் கவனித்துவரும் ஒரு புலிப் பினாமியாகவே அண்மைக்காலத்தில் செயற்பட்டுவருகின்றார்.

தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இவருக்கு புலிகளிடமிருந்து போய்ச் சேரும் பெருந்தொகைப்பணத்திற்கு புலிகளுக்கு கணக்குக்காட்டுவதற்காகவே இவர் அவ்வப்போது சில போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்.யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்வதாகவும், அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறும் அவர் விடுத்த அழைப்பை ஏற்று தமிழகத்திலுள்ள மக்கள் உணவுப்பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பிவைத்தனர்.சுமார் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் வந்து சேர்ந்தாலும், அதனைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்க சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் முன்வரவில்லை.அதனை அனுப்பிவைக்க சில லட்சம் ரூபாவை செலவிட யாரும் முன்வராததே முக்கிய காரணம்.இந்திய மத்திய அரசும் அவரது சுய ரூபம் தெரிந்திருந்ததால் அந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் தானே படகுகளில் அவற்றை எடுத்துச் செல்லப்போவதாக அறிவித்த நெடுமாறன், அதற்கான பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டிருந்தார்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதென்றால், அந்தந்த நாடுகளின் குடியகல்வு, குடிவரவு சட்டங்களை கருத்தில் எடுத்தாகவேண்டும்.இலங்கைக்கு ஒருவர் இந்தியாவிலிருந்து செல்வதென்றால் இந்திய குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியைப் பெறவேண்டும். அவ்வாறு பெறாமல் சென்றாலேயே பொலிசார் கைதுசெய்து விடுவார்கள். இது எல்லாம் நெடுமாறன் ஐயாவுக்கு தெரியாததல்ல.இதற்கு முன்னரும் இதுபோன்ற படகுப்பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ள, சில நூறு மீட்டர் சென்றதும் பொலிசார் கைது செய்தனர்.இப்போதும் அப்படித்தான் கைதுசெய்வார்கள் என்றே பலரும் நினைத்திருந்தனர்.ஆனால், பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மீனவர்கள் தமது படகுகளைக் கொடுக்க முன்வராததாலேயே இந்த பயணத்தை ரத்துச்செய்ததாக நெடுமாறன் ஐயா அறிவித்திருப்பதுதான் ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.

தமிழகத்தில் மீனவர்கள் புலிகளின் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாலேயே இன்று ஈழதத்மிழர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதை நெடுமாறன் ஐயா வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.அது மாத்திரமன்றி, நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் ஆதரவுத்தளமான தமிழக மீனவ சமுதாயத்தின் அதரவுத்தளத்தையும் அவர்கள் இழந்துவிட்டது இப்போது தெரியவந்திருக்கின்றது.படகுப்பயணத்திற்கு இத்தனை முன்னெற்பாடுகளைச் செய்திருந்த நெடுமாறன் அவர்கள், படகுகளை ஏற்பாடு செய்யாமல்தான் இருந்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கின்றது.இவையெல்லாவற்றையும் பார்க்கின்றபோது, சிறிலங்கா படையினர் தெரிவித்திருப்பதுபோல, சிறிலங்கா கடற்படையினரின் கவனத்தை பாக்குநீரிணைப்பக்கம் திருப்பிவிட்டு, அடுத்த பக்கத்தால் புலிகள் ஆயுதக்கப்பலை கொண்டுபோய் சேர்க்க எடுத்த முயற்சியே இது என்ற கூற்றிலும் உண்மையிருக்கலாம்.