தற்கொலைத்தாக்குதல்கள் சர்வதேச அங்கீகாரத்தை

தற்கொலைத்தாக்குதல்கள் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெறமுடியாது புலிகளின் தலைவரே!

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்- தமிழ்நாட்டு ஆதரவு தொடர வேண்டும் என புலிகளின் தலைவர் உரை நிகழ்த்தி ஒருவாரம் நிறைவு பெறுவதற்குள் கொழும்பில் தற்கொலைத்தாக்குதல் நடாத்தி தாங்கள் மாறப்போவதில்லை என்பதை புலிகள் நிருபித்துள்ளனர்.
இந்த விடுதலைப் பாதையிற் சென்று சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம். என மாவீரர் தினத்தில் தம்மை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த புலிகளின் தலைவர், இத்தாக்குதல் மூலம் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதை சர்வதேச நாடுகளின் முன்னால் நிருபித்துக்காட்டியிருக்கிறார்.

தற்கொலைத்தாக்குதல் உலகப்பயங்கரவாதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகும். பொதுமக்கள் நடமாடும் இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தற்கொலைத்தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்க வெறுக்கப்படுகின்ற பயங்கரவாத நடவடிக்கையாகும். 240க்கும் அதிகமான தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொண்டிருக்கும் புலிகள் உலகநாடுகளின் கண்டனங்களையும் தடைகளையும் எதிர்கொள்வதற்கு இந்த வழிமுறைகளும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. தனிமனிதர்களை பொது இடங்களில் தாக்கியழிப்பதற்கு புலிகள் மிக முக்கிய கருவியாக தற்கொலைத்தாக்குதலைப் பயன்படுத்துகின்றனர்.

பிரபாகரன் தனது மாவீரர் உரையில், அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப காலமாற்றத்திற்கு ஏற்ப சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால் சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை. சிங்களத் தேசம் புதிய காற்றைச் சுவாசித்து புதிதாகச் சிந்திக்க மறுக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிங்களத்தேசம் புதியகாற்றைச் சுவாசித்து சிந்திக்க மறுப்பது ஒருபக்கம் இருக்கட்டும். கடந்த 25வருடகாலமாக தமிழ்ச்சமூகம் புதிய காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறதை புலிகளின் தலைவர் உணரவேண்டும். படுகொலைகளும் மனித அவலங்களும் தினசரி வாழ்க்கையாக சுமந்து கொண்டிருக்கும் தமிழ்சமூகம் புதிய உலக மாற்றங்களை உள்வாங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. வருடத்திற்கு ஒரு தடவை பங்கருக்குள் இருந்து உரையை நிகழ்த்தி விட்டு யுத்தம்தான் ஒரு வழி என அறைகூவல் விடுகின்ற புலிகளின் தலைவர், மக்களின் அவலங்களை ஒரு கணமாவது நேரில் காண்பாராக இருந்தால் அவர் தனது சிந்தனையை மாற்ற உதவியாக இருக்கும். எந்நேரமும் உயிர்பயத்துடன் தனது பாதுகாப்பை பற்றியே சிந்திப்பவரால் மக்களின் துயரங்களை எப்படி உணர முடியும்?

இனஅழிப்புப் போரிலிருந்து தமிழ்மக்களைக் காக்கப் புலிகள் நடாத்துகின்ற ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்தும் வருவதாகவும். தமிழரின் நீதியான போராட்டத்தைத் திரிபுபடுத்தி இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விசமப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறதாகவும் கூறுகின்ற புலிகளின் தலைவர், யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்பதை மறுதலித்து மீண்டும் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை தனியரசை நிறுவுதற்கான வழியாகத் தேர்ந்தெடுக்கிறார். இந்த வழிமுறைகள் நிராகரிக்கப்பட்டவை.. உலக அரங்கில் புலிகளை வேண்டத்தகாதோராக தீண்டத்தகாதோராகத் தனிமைப்படுத்தி ஒதுக்கி ஓரங்கட்டவும் புலிகளின் வன்முறைகளே காரணமாக இருந்தன என்பதை புலிகளின் தலைவர் உணரவேண்டும்.

இன்று தமிழ்மக்கள் விரும்புவதெல்லாம் யுத்தமற்ற ஒரு சமாதானச்சூழலைத்தான். கடந்த 25வருடங்களாக தமிழ்மக்கள் சந்தித்த இழப்புகள் துயரங்கள் அனைத்தும் ஆயுதப்போராட்டத்தின் விளைபலன்கள். புலிகள் தமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து ஒரடி கூட வெளியே வரமுடியாமல் திணறுகின்றனர். தமது பிரதேசங்களை பாதுகாப்பதற்கே புலிகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புலிகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். இது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் நிலவுகின்ற சூழலாக இருக்கும் அதேசமயம் தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்மக்களையும் புலிகள் நிம்மதியாக வாழவிடத்தயாரில்லை. தனிநபர்களை குறிவைத்து தாக்கும் தற்கொலைத்தாக்குதல்களில் பொதுமக்களும் பலி கொள்ளப்படுகின்றனர். தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்மக்கள் மேலும் மேலும் சோதனை, விசாரணை நெருக்கடிகளை அதிகமாகவே சந்திக்கவேண்டியிருக்கும். இது புலிகளுக்கும் புலிகளின் ஊதுகுழல்களான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் பிரச்சாரத்திற்கு பயனைக் கொடுக்கும. அதேசமயம்; தமிழர்களை சிங்கள அரசு கொடுமை செய்கிறது என கூக்குரலிட உதவி செய்யும்.

மாறிவரும் உலக மாற்றங்களுக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் புலிகள் தனியரசை இத்தகைய வழிமுறைகளால் அமைக்க முயல்வது கற்பனையான விடயமாகும். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இழந்து பயங்கரவாத அமைப்பாக தன்னை முற்று முழுவதுமாக குளிப்பாட்டிக்கொள்வதில் புலிகளும் புலிகளின் தலைவரும் எத்தனை ஆனந்தம் கொள்கின்றனர். இதில் சர்வதேசம் தம்மை அங்கீகரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வேறு.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு